நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரத்தை முறைகேடாக பயன்படுத்தி வெற்றி பெற பா.ஜ.க. முயற்சி முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு


நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரத்தை முறைகேடாக பயன்படுத்தி வெற்றி பெற பா.ஜ.க. முயற்சி முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 Jan 2019 10:30 PM GMT (Updated: 25 Jan 2019 10:30 PM GMT)

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரத்தை முறைகேடாக பயன்படுத்தி வெற்றி பெற பா.ஜ.க. முயற்சி செய்கிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

நெல்லித்தோப்பு தொகுதி அண்ணாநகரில் புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் செவிலியர் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இந்த ஊர்வலத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன், மாநில திட்ட அதிகாரி சுந்தர்ராஜ், துணை இயக்குனர் ரகுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் அன்னை தெரசா செவிலியர் கல்லூரி, கஸ்தூரிபாய் செவிலியர் கல்லூரி, இந்திராகாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தியபடி சென்றனர். அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்த பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்த பின் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த வேண்டாம் என்பது அனைத்துக் கட்சிகளின் கருத்தாக உள்ளது. தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளே தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்றுகின்றன. காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி. வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளது. மக்களின் வாக்குரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பா.ஜ.க. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை முறைகேடாக பயன்படுத்தி குறுக்கு வழியில் தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story