கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் பணிக்கான தேர்வு 1,786 பேர் எழுதினர்


கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் பணிக்கான தேர்வு 1,786 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 27 Jan 2019 10:45 PM GMT (Updated: 27 Jan 2019 8:26 PM GMT)

கரூரில், நடந்த கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் பணிக்கான தேர்வை 1,786 பேர் எழுதினர்.

கரூர்,

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்பட்ட கூட்டுறவுத்துறையில் இளநிலை ஆய்வாளர் பணிக்கான குரூப் 3-ஏ தேர்வு கரூர் மாவட்டத்தில் 8 மையங்களில் நேற்று நடைபெற்றது. இதில் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீ சாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்வு குறித்த நேரத்தில் தொடங்கி விட்டதா? எனவும், பார்வைத்திறன் குறைபாடுடையோர் உள்பட மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுத போதிய வசதிகள் செய்யப்பட்டிருக்கிறதா? என்பன உள்ளிட்டவை குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அன்பழகன் கூறுகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் கூட்டுறவுத்துறைக்கான இளநிலை ஆய்வாளர் பணிக்கான குரூப் 3 - ஏ தேர்வு கரூர் மாவட்டத்தில் தாந்தோன்றிமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ சாரதா பெண்கள் மேல் நிலைப்பள்ளி, ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி, கரூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, வெற்றி விநாயகா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி ஆகிய 8 மையங்களில் நடந்தது.

இந்த தேர்வினை எழுதுவதற்கு 2,560 பேர் விண்ணப்பித்து இருந்தனர். எனினும் இதில் 1,786 பேர் மட்டும் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 774 பேர் தேர்வு எழுதவரவில்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வர் களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. துணை வட்டாட்சியர்கள் தலைமையிலான இரண்டு நகரும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர் அம்பாயிரநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். 

Next Story