ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் கலெக்டரிடம், கிராம மக்கள் வலியுறுத்தல்


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் கலெக்டரிடம், கிராம மக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Jan 2019 10:45 PM GMT (Updated: 28 Jan 2019 7:13 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது தூத்துக்குடி திரவியபுரம் பகுதி, பொன்னகரம் பகுதி மற்றும் பூபாலராயர்புரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் கூட்டாக கலெக்டரிடம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி கோரிக்கை மனு கொடுத்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது;-

எங்கள் பகுதிகளை சேர்ந்த பலர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றி வந்தனர். தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம்.

பசுமை தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பரிந்துரை செய்துள்ளது. அதனை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை திறந்து எங்கள் வாழ்வாதாரத்தை மீட்க உதவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி இருந்தனர்.

Next Story