ஆரம்ப சுகாதார நிலையம், துணை நிலையங்களில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியாற்ற நடவடிக்கை - நாராயணசாமி உறுதி


ஆரம்ப சுகாதார நிலையம், துணை நிலையங்களில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியாற்ற நடவடிக்கை - நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 28 Jan 2019 11:30 PM GMT (Updated: 28 Jan 2019 7:41 PM GMT)

ஆரம்ப சுகாதார நிலையம், துணை நிலையங்களில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் டாக்டர்கள், செவிலியர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பாகூர்,

புதுச்சேரி சுகாதார துறை சார்பில் மத்திய அரசு சுகாதார துறை ஆதரவோடு, கிருமாம்பாக்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் மெகா உயர் சிகிச்சை இலவச மருத்துவ முகாம் நடந்தது. இயக்குனர் ராமன் வரவேற்றார். முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமைதாங்கினார். அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, கோகுலகிருஷ்ணன் எம்.பி., ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முகாமில், புற்றுநோய், இதய நோய், கருவிழி, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், நுரையீரல், நரம்பியல், சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.முகாமில், பெண்களுக்கு ஆரோக்கிய குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை முதல்-அமைச்சர் வழங்கினார்.

இதில், மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி, ஆறுபடை வீடு, மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரிகள், அரவிந்த் கண் மருத்துவமனை, அப்பல்லோ டாக்டர் செரியன் மற்றும் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

முகாமில், முதல் அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது;-

புதுச்சேரி மாநிலத்தில் புற்றுநோய், நீழிரிவு, ரத்த அழுத்தம், கண் புரை நோய் மக்களிடையே அதிகமாக காணப்பட்டு வருகிறது. உடற் பயிற்சியின்மை, உணவு கட்டுப்பாடு நோய் பாதிப்புக்கு காரணமாக இருக்கிறது. இது போன்ற முகாம்களை அனைத்து கொம்யூன்களிலும் செயல்படுத்திட வேண்டும். அனைத்து மக்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிராமப்புறத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் துணை நிலையங்களில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் டாக்டர் மற்றும் செவிலியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

முகாமில் கோகுலகிருஷ்ணன் எம்.பி., பேசியதாவது;-

சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் கடந்த பின்பும் தரமான மருத்துவம் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஏழைகள் அடுத்த வேளை உணவுக்கும், கல்வி, மருத்துவ சேவைக்கும் போராடி வரும் நிலையில் சில குறிப்பிட்ட கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மட்டும் ஆண்டு தோறும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இது நாட்டிற்கு ஆரோக்கியமானதல்ல. இந்த இடைவெளி அதிகரித்தால், சமூக ஜனநாயக கட்டமைப்பு முழுமையாக சிதைந்து விடும். சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்கு குறைவாக நிதி ஒதுக்குவதன் மூலம், சமூகத்தில் சமத்துவமின்மையை உருவாக்க வழி செய்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story