மாணவியை கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு செய்த தையல் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு


மாணவியை கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு செய்த தையல் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு
x
தினத்தந்தி 29 Jan 2019 11:45 PM GMT (Updated: 29 Jan 2019 6:41 PM GMT)

மாணவியை கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு செய்த தையல் தொழிலாளிக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் அம்மாபாளையம் அருகே தேவராயம்பாளையத்தை சேர்ந்தவர் அப்துல் காதர் ஜெய்லானி(வயது 32). தையல் தொழிலாளி ஆவார். இவர் கடந்த 15–9–2017 அன்று அதே பகுதியில் 10–ம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி பெற்றோருக்கு தெரியாமல் கன்னியாகுமரிக்கு கடத்தி சென்றார். பின்னர் அந்த மாணவியை அவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கலையரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அப்துல் காதர் ஜெய்லானியை கைது செய்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, மாணவியை கடத்தி சென்ற குற்றத்துக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை, போக்சோ பிரிவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை, இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அப்துல் காதர் ஜெய்லானி அனுபவிக்குமாறு தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.


Next Story