தண்டவாளத்தில் தலை சிதைந்த நிலையில் மாணவர் பிணம் போலீஸ் விசாரணை


தண்டவாளத்தில் தலை சிதைந்த நிலையில் மாணவர் பிணம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 30 Jan 2019 11:00 PM GMT (Updated: 30 Jan 2019 3:09 PM GMT)

தக்கலை அருகே தண்டவாளத்தில் தலை சிதைந்த நிலையில் மாணவர் பிணமாக கிடந்தார்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே மாவிளை பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று காலையில் வாலிபர் ஒருவர் தலை சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பின்னர் நாகர்கோவில் ரெயில்வே போலீசாரும் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர், திங்கள்நகர் அருகே தலக்குளம் பட்டறைவிளை பகுதியை சேர்ந்த மரிய மிக்கேல் மகன் சகாயராஜா (வயது 19) என்பது தெரியவந்தது. சகாயராஜாவின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அதனால், வறுமை காரணமாக தக்கலை அருகே புதூர் மாங்கோடு பகுதியில் உள்ள தனது உறவினரான மரிய டென்னிஸ் என்பவர் வீட்டில் வசித்து வந்தார். மேலும், திக்கணங்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐ.யில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

சகாயராஜா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? இல்லை தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்று தெரியவில்லை. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story