அரசு பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு ஆசிரியர்களின் வருகை பற்றி கேட்டறிந்தார்


அரசு பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு ஆசிரியர்களின் வருகை பற்றி கேட்டறிந்தார்
x
தினத்தந்தி 30 Jan 2019 11:15 PM GMT (Updated: 30 Jan 2019 7:41 PM GMT)

மாயனூர் அரசு பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென ஆய்வு செய்து, ஆசிரியர்களின் வருகை பற்றி கேட்டறிந்தார்.

கிருஷ்ணராயபுரம்,

தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி முதல் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளிகள் செயல்படாத சூழ்நிலை ஏற்பட்டு, மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது. இதை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து, அந்த இடத்திற்கு புதியதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இதனால் நேற்று முன்தினம் முதல் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். இதையடுத்து பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் வகுப்புகள் நடந்தன. இந்தநிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட் டையன் நேற்று காலை ஈரோட்டிலிருந்து கரூர் மாவட்டம் வழியாக திருச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது செல்லும் வழியில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாயனூர் அரசு உயர் நிலைப்பள்ளிக்கு வந்து பள்ளியை திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் ரத்தினத்திடம், பள்ளியில் பணிபுரியும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு? நேற்று பள்ளிக்கு வருகை தந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்பன உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ஆசிரி யர்களிடம், மாணவர்களை சிறப்பான முறையில் தேர்ச்சி பெற வைத்து பள்ளிக்கு பெருமை சேர்க்க கேட்டுக்கொண்டு வாழ்த் துக்களை தெரிவித்தார். அதன்பின் அங்கிருந்து காரில் புறப்பட்டு திருச்சி விமானநிலையத்திற்கு சென்றார். இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் நேற்று பணிக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Next Story