மாவட்டத்தில் இறுதி பட்டியல் வெளியீடு: 6 தொகுதிகளில் 13 லட்சத்து 77 ஆயிரம் வாக்காளர்கள் 23,909 பேர் புதிதாக சேர்ப்பு


மாவட்டத்தில் இறுதி பட்டியல் வெளியீடு: 6 தொகுதிகளில் 13 லட்சத்து 77 ஆயிரம் வாக்காளர்கள் 23,909 பேர் புதிதாக சேர்ப்பு
x
தினத்தந்தி 31 Jan 2019 10:45 PM GMT (Updated: 31 Jan 2019 7:50 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி புதிதாக சேர்க்கப்பட்ட 23 ஆயிரத்து 909 வாக்காளர்களுடன் சேர்த்து, மொத்தம் 6 தொகுதிகளில் 13 லட்சத்து 77 ஆயிரத்து 987 வாக்காளர்கள் உள்ளனர்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இம்மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் இந்த பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 1.9.2018 முதல் 31.10.2018 வரை பொது மக்களிடம் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடமாற்றம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டன. இவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுதியான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டும், நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்டும் இறுதி வாக்காளர் பட்டியலானது வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலை கலெக்டர் அலுவலகம், உதவி கலெக்டர் மற்றும் தாசில்தார் அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம்.

1.9.2018 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி நாமக்கல் மாவட்டத்தில் 13 லட்சத்து 60 ஆயிரத்து 506 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வாக்காளர் பட்டியலில் 23 ஆயிரத்து 909 பேர் புதியதாக சேர்க்கப்பட்டும், 6,428 பேர் நீக்கம் செய்யப்பட்டும் உள்ளனர். தற்போது வெளியிடப்பட்டு உள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி நாமக்கல் மாவட்டத்தில் 6 லட்சத்து 74 ஆயிரத்து 53 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 3 ஆயிரத்து 815 பெண் வாக்காளர்களும், 119 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 13 லட்சத்து 77 ஆயிரத்து 987 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண்கள் வாக்காளர்கள் 29 ஆயிரத்து 762 பேர் அதிகம் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களில் உள்ள அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். ராசிபுரம் சட்டசபை தொகுதியை பொறுத்த வரையில் புதிதாக 4,278 பேரும், சேந்தமங்கலம் தொகுதியில் 3,883 பேரும், நாமக்கல் தொகுதியில் 3,778 பேரும், பரமத்திவேலூர் தொகுதியில் 3,661 பேரும், திருச்செங்கோடு தொகுதியில் 3,851 பேரும், குமாரபாளையம் தொகுதியில் 4,458 பேரும் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தேர்தல் தனி தாசில்தார் சுப்பிரமணியம் உள்பட அரசு துறை அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்திற்கு உட்பட்ட பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலை திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும், அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Next Story