பட்டதாரி பெண் அடித்துக்கொலை; வாலிபர் படுகாயம் மர்மநபர்கள் வெறிச்செயல்


பட்டதாரி பெண் அடித்துக்கொலை; வாலிபர் படுகாயம் மர்மநபர்கள் வெறிச்செயல்
x
தினத்தந்தி 31 Jan 2019 10:15 PM GMT (Updated: 31 Jan 2019 8:30 PM GMT)

கறம்பக்குடி அருகே பட்டதாரி பெண்ணை மர்மநபர்கள் அடித்துக் கொலை செய்தனர். அவர்கள் தாக்கியதில் வாலிபர் படுகாயமடைந்தார்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள சூரக்காடு ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் மகாலட்சுமி(வயது 30). பட்டதாரி. அதே ஊரை சேர்ந்த மாரிமுத்து மகன் மோகன்(36). இவரும் பட்டதாரி ஆவார். மகா லட்சுமிக்கும், மோகனுக்கும் திருமணம் செய்ய, அவர் களுடைய பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு மகாலட்சுமி வீட்டின் பின்புறம் அவரும், மோகனும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மகாலட்சுமியையும், மோகனையும் உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதா பமாக இறந்தார். மோகன் படுகாயமடைந்தார். இதை யடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் உயிருக்கு போராடிய மோகனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக் கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story