தடையாக கருதப்பட்ட மக்கள் தொகையே மனித வளமாக மாறியுள்ளது அமைச்சர் கமலக்கண்ணன் பெருமிதம்


தடையாக கருதப்பட்ட மக்கள் தொகையே மனித வளமாக மாறியுள்ளது அமைச்சர் கமலக்கண்ணன் பெருமிதம்
x
தினத்தந்தி 1 Feb 2019 3:50 AM IST (Updated: 1 Feb 2019 3:50 AM IST)
t-max-icont-min-icon

தடையாக கருதப்பட்ட மக்கள் தொகையே தற்போது மனித வளமாக மாற்றப்பட்டுள்ளது என்று அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு மற்றும் மத்திய அரசின் நிதி ஆயோக் சார்பில் “கல்விக்கான மனித ஆற்றல் மூலதனம் மேம்பாடு அடையும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய நிலைத்த பயன்பாடுடைய நடவடிக்கைகள்” பற்றிய ஒருநாள் பயிற்சி பட்டறை புதுவை அக்கார்டு ஓட்டலில் உள்ள கருத்தரங்கு அறையில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கி, பயிற்சி பட்டறையை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா கல்வித்துறையில் பல்வேறு வகையான மாற்றங்களை எதிர்நோக்கி உள்ளது. 1970-ல் இந்தியாவில் உள்ள மக்கள் தொகைதான் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக உலக நாடுகள் கூறியது. ஆனால் இன்று அதுவே மற்ற நாடுகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் நாட்டின் மனித வளமாகவும், பலமாகவும் மாறியுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து தற்போது உள்ள கல்வி முறையை மேம்படுத்த முயற்சிகள் எடுத்து வருகிறது. நீடித்த, நிலைத்த நல்ல பலனை கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் செல்வது குறைந்து, தனியார் பள்ளிகளை நோக்கி செல்லும் சவாலான சூழல் உள்ளது. இவற்றை மாற்றுவதற்கும், சிறந்த கல்வி அரசு பள்ளிகளில் வழங்கப்படும் என்பதை தெரிவிக்கும் வகையிலும் இந்த பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது. இது பயிற்சி பட்டறைக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பயிற்சி பட்டறையில் கல்வித்துறை செயலாளர் அன்பரசு பேசியதாவது:-
புதுச்சேரியில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆனால் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியின் தரம் குறைவாக உள்ளது. அதனை உயர்த்த வேண்டும். குறிப்பாக தேசிய அளவில் ஆங்கிலம், கணிதம் மற்றும் போட்டி தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி பெறும் அளவிற்கு இல்லாமல் புதுச்சேரி மாணவர்களின் திறன் குறைவாக உள்ளது. அதனை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பயிற்சி பட்டறையில் நிதி ஆயோக்கின் ஆலோசகரும், இணை செயலருமான அலோக் குமார், பாஸ்டன் ஆலோசனை குழும இயக்குனர் சீமா பன்ஸால் ஆகியோர் கலந்துகொண்டு திட்டம் குறித்து விளக்கிக்கூறினார். நிகழ்ச்சியில் புதுவை அரசு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, உயர் கல்வித்துறை இயக்குனர் யாசிம் ரெட்டி மற்றும் புதுச்சேரி தேசிய தகவல் மைய அலுவலர்கள், அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், அரசுப்பள்ளி முதல்வர்கள், அரசு சாரா நிறுவனங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Next Story