கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு ரோபோ மூலம் பாடம் நடத்த நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு ரோபோ மூலம் பாடம் நடத்த நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 1 Feb 2019 10:30 PM GMT (Updated: 1 Feb 2019 6:48 PM GMT)

கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு ‘ரோபோ‘ மூலம் பாடம் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாதிபாளையத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் நெல் சேமிப்பு கிடங்குடன் கூடிய வணிக வளாகம் கட்டுவதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பொங்கலையொட்டி அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1,000 வீதம் 2 கோடியே 7 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்த அரசு அனைவரையும் அரவணைத்துச் செல்வதாக திகழ்கிறது.

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திய திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் தீவிரவாதம் இல்லை. தமிழகம் அமைதி பூங்காவாக விளங்கி வருகிறது.

தமிழகத்தில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் 1 முதல் 8–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் சீருடை வண்ணச் சீருடைகளாக மாற்றப்பட உள்ளன. தற்போது புதிதாக கல்வித்துறை சார்பில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 1 லட்சம் பேர் பயன்பெறுகிறார்கள்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக மார்ச் மாதத்திற்குள் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். 8, 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் இன்டர்நெட் உடன் கூடிய கம்ப்யூட்டர் வசதி செய்து தரப்படும். தமிழகத்தில் கற்றல் குறைபாடு உள்ள மாணவ–மாணவிகளுக்கு அவர்களின் திறனை வளர்ப்பதற்கு ‘ரோபோ‘ மூலம் பாடம் நடத்தும் முறையை பள்ளிகளில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் முறை விரைவில் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து நிருபர்கள் அமைச்சரிடம், ‘போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரிய–ஆசிரியைகள், அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ‘இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் கூறாமல் அமைதியாக இருப்பதே நல்லது’ என்று கூறினார்.


Next Story