அரசின் ஆதார விலையில் உளுந்து கொள்முதல் - கலெக்டர் தொடங்கி வைத்தார்


அரசின் ஆதார விலையில் உளுந்து கொள்முதல் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 Feb 2019 10:45 PM GMT (Updated: 1 Feb 2019 7:29 PM GMT)

அரசின் ஆதார விலையில் உளுந்து கொள் முதலை கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம், 

விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ் உளுந்து கொள்முதல் தொடக்க விழா நடைபெற்றது.

விழாவிற்கு வேளாண்மை இணை இயக்குனர் சண்முகம் தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் தனசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கருணாநிதி, ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு உளுந்து கொள்முதலை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மாநில அளவில் உணவுப்பொருள் உற்பத்தியில் விழுப்புரம் மாவட்டம் கடந்த 4, 5 ஆண்டுகளாக முன்னணியில் உள்ளது. கடந்த ஆண்டு 11.50 லட்சம் மெட்ரிக் டன் உணவுப்பொருள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

உளுந்துக்கு சரியான விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தேசிய வேளாண் கூட்டுறவு இணையத்துடன் இணைந்து இந்த கொள்முதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 3 ஆயிரம் மெட்ரிக் டன் உளுந்து உற்பத்தி செய்யப்பட்டாலும் இத்திட்டம் சற்று காலதாமதமாக தொடங்கப்பட்டதால் 874 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது உளுந்து குவிண்டால் ஒன்றுக்கு அரசால் குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.5,600 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உளுந்து கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் செய்யப்படும் உளுந்துக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு ஆகிய விவரங்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் நெல், அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் குபேரன், ஒழுங்குமுறை விற்பனைக்கூட தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story