தலைவாசல் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்


தலைவாசல் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 1 Feb 2019 9:30 PM GMT (Updated: 1 Feb 2019 8:41 PM GMT)

தலைவாசல் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தலைவாசல், 

தலைவாசல் அருகே புளியங்குறிச்சி ஊராட்சி உள்ளது. இங்கு சுமார் 4 ஆயிரம் பேர் உள்ளனர். இங்குள்ள ராஜீவ் காந்தி நகரில் போதிய குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். எனவே குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை 6 மணியளவில் புளியங்குறிச்சியிலிருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் பெண்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும் வீரகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி, முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர் கருணாநிதி மற்றும் போலீசார் சென்று மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலைமறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story