சீர்காழியில் இருந்து பனங்காட்டான்குடிக்கு பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தில் வலியுறுத்தல்


சீர்காழியில் இருந்து பனங்காட்டான்குடிக்கு பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Feb 2019 10:30 PM GMT (Updated: 1 Feb 2019 9:49 PM GMT)

சீர்காழியில் இருந்து பனங்காட்டான்குடிக்கு பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சீர்காழி, 

சீர்காழி அருகே அகணி ஊராட்சியில் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சீர்காழி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவை தலைவர் அன்பழகன், ஒன்றிய துணை செயலாளர் சசிக்குமார், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமு, அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் துரை, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், ராமஇளங்கோவன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

சீர்காழியில் இருந்து பனங்காட்டான்குடிக்கு பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும். அகணி ஊராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். அகணி ஊராட்சியில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் தூர்வார வேண்டும். புதிய கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும். 2017-18-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகையை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள கர்ப்பிணி உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்டவைகளை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகர செயலாளர் சுப்பராயன், சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிக்குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காழிகலைவாணன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் விஜயேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் கிராமத்தில் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும். ஏழை-எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். ஊராட்சிகளில் நிரந்தரமாக ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட நிர்வாகிகள் வீரமணி, ஜுபைர், முருகன், பாஸ்கர், ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story