ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பீட் மாவட்ட கூடுதல் கலெக்டர் கைது


ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பீட் மாவட்ட கூடுதல் கலெக்டர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2019 10:00 PM GMT (Updated: 2 Feb 2019 10:00 PM GMT)

தானிய கிடங்கி நிர்வாகியிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பீட் மாவட்ட கூடுதல் கலெக்டர் கைது செய்யப்பட்டார்.

பீட்,

பீட் மாவட்டத்தில் கூடுதல் கலெக்டராக பணியாற்றி வருபவர் பி.எம்.காம்பிளே. இவர் தலைமையிலான குழு சமீபத்தில் அப்பகுதியில் உள்ள உணவு தானிய சேமிப்பு கிடங்கில் சோதனை நடத்தியது. இந்த நிலையில் உணவு தானிய கிடங்கில் நடக்கும் தவறுகளை கண்டுகொள்ளாமல் இருக்கவும், விசாரணையில் சாதகமாக செயல்படவும் அதன் நிர்வாகிகளிடம், கூடுதல் கலெக்டர் பி.எம்.காம்பிளே ரூ.10 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறிய தானிய கிடங்கி நிர்வாகி, ரூ. 5 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டார்.

கைது

பின்னர் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத அவர் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த யோசனையின் பேரில் அவர் ரூ.5 லட்சத்துடன் கூடுதல் கலெக்டரின் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்குவந்த பொது வினியோகத்துறை சீனியர் கிளார்க் மகாதேவ் மாகாகுடே என்பவர், கூடுதல் கலெக்டர் சார்பில் அந்த பணத்தை பெற்றுக்கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் கூடுதல் கலெக்டர் பி.எம்.காம்பிளேயும் கைதானார். இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story