நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை


நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 3 Feb 2019 11:00 PM GMT (Updated: 3 Feb 2019 6:59 PM GMT)

நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரியலூர்,

மறைந்த முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 50-வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி அரியலூர் காமராஜர் திடலில் இருந்து மாவட்ட அ.தி.மு.க.வினர் ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் தலைமையில், மவுன ஊர்வலமாக புறப்பட்டு பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் அன்பழகன், மாணவரணி செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் தலைமையில் அக்கட்சியினர் தேரடியில் இருந்து மவுன ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலத்தினர். இதில் கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் துரைராஜ், இளைஞரணி மாவட்ட தலைவர் இளையராசன், நகர செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ம.தி.மு.க.வின் பொதுக்குழு உறுப்பினர் தங்கவேலு தலைமையில், ஒன்றிய செயலாளர்கள் ராமநாதன், காமராஜ், நகர செயலாளர் மனோகரன் மற்றும் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி ஜெயங்கொண்டம் அ.தி.மு.க சார்பில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில், அக்கட்சியினர் காந்தி பூங்காவில் இருந்து மவுன ஊர்வலமாக புறப்பட்டு கடைவீதி அருகே உள்ள அண்ணா சிலைக்கு வந்தடைந்தனர். பின்னர் ராமஜெயலிங்கம் தலைமையில் அ.தி.மு.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சியின் ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், நகர செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் தலைமையில் ஜெயங்கொண்டம் தி.மு.க.வினர் ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் இருந்து மவுன ஊர்வலமாக புறப்பட்டு சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செந்துறையில் தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர்கள் ஞானமூர்த்தி, செல்வராசு ஆகியோர் தலைமையில் கட்சியினர் செந்துறையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி, இளைஞரணி செயலாளர் பாண்டியன் மற்றும் முன்னாள் ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story