காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் பரிதாபம்: குடும்ப தகராறில் ஆசிரியை தீக்குளிப்பு காப்பாற்ற முயன்ற கணவரும் உடல் கருகினார்


காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் பரிதாபம்: குடும்ப தகராறில் ஆசிரியை தீக்குளிப்பு காப்பாற்ற முயன்ற கணவரும் உடல் கருகினார்
x
தினத்தந்தி 3 Feb 2019 10:00 PM GMT (Updated: 3 Feb 2019 7:16 PM GMT)

அஞ்செட்டி அருகே காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் ஆசிரியை தீக்குளித்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் உடல் கருகினார்.

தேன்கனிக்கோட்டை.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 32). இவரும் ஈரோட்டைச் சேர்ந்த வாணி என்கிற பானு (22) என்பவரும் காதலித்து வந்தனர். அவர்கள் 2 பேரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து 2 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். வாணி தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். பழனிசாமி தனியார் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் கணவன்-மனைவி 2 பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது அவர்களிடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த வாணி வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற பழனிசாமியும் உடல் கருகினார்.

பலத்த தீக்காயம் அடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு அவர்கள் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story