நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது முல்லைப்பெரியாற்றில் மூழ்கி கேரள விவசாயி சாவு


நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது முல்லைப்பெரியாற்றில் மூழ்கி கேரள விவசாயி சாவு
x
தினத்தந்தி 3 Feb 2019 11:15 PM GMT (Updated: 3 Feb 2019 7:58 PM GMT)

கூடலூர் அருகே முல்லைப்பெரியாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி கேரளாவை சேர்ந்த விவசாயி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கூடலூர்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி ரோசப்பூ கண்டம் பகுதியை சேர்ந்தவர் பென்னி (வயது 46). இவர் அதே பகுதியில் காபி, மிளகு தோட்டங்களை வைத்து விவசாயம் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் மாலை பென்னி, அவருடைய நண்பர்கள் 5 பேர்களுடன் கூடலூர் பகுதிக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் காஞ்சிமரத்துறை சிறுபுனல் நீர்மின் உற்பத்தி நிலையம் அருகே உள்ள முல்லைப்பெரியாற்றுக்கு வந்தனர்.

பின்னர் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரின் ஆழமான இடத்துக்கு பென்னி சென்றதாக கூறப்படுகிறது. அதில் அவர் நீரில் மூழ்கினார். இதை கண்ட அவருடைய நண்பர்கள் அக்கம்பக்கத்தினரிடம் காப்பாற்றும்படி கூச்சலிட்டனர்.

உடனே அவர்கள் அங்கு வந்து ஆற்றில் குதித்து பென்னியை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசாருக்கும், கம்பம் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு வந்தனர். தீயணைப்புத்துறையினர் ஆற்றில் இறங்கி பென்னியை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு நேரமாகியதால் தீயணைப்புத்துறையினரின் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

பின்பு நேற்று காலையில் முல்லைப்பெரியாற்றில் தீயணைப்புத்துறையினர் மீண்டும் பென்னியை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி பென்னியை பிணமாக மீட்டனர். அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story