மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல், பாலிடெக்னிக் மாணவர் பலி


மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல், பாலிடெக்னிக் மாணவர் பலி
x
தினத்தந்தி 3 Feb 2019 10:18 PM GMT (Updated: 3 Feb 2019 10:18 PM GMT)

திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூரை அடுத்த ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் சக்தி (வயது 20). இவர் செஞ்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் முகையூரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். இருதயபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த டிராக்டர் ஒன்று சக்தி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சக்தியின் மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரித்தனர். பின்னர் சக்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story