கிருஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம்


கிருஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 4 Feb 2019 11:00 PM GMT (Updated: 4 Feb 2019 4:12 PM GMT)

கிருஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்து துறை, காவல் துறை, ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 30-வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இதை கலெக்டர் பிரபாகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வ லம் பெங்களூரு சாலை வழியாக கிருஷ்ணகிரி 5 ரோட்டை அடைந்தது. ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், ஆட்டோ டிரைவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் சாலை விதிகளை தெரிந்துக்கொள்ளும் வகையில் இந்த ஊர்வலம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போக்குவரத்துறை சார்பில் வருகிற 10-ந் தேதி வரை 7 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளாக மருத்துவ முகாம், கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு ஊர்வலங்கள், இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.


குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் ஓட்டுனர் உரிமம் பெற்றும், மது அருந்தாமலும், செல்போன் பேசாமலும், வாகனத்தை இயக்க வேண்டும். 4 சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்தும், மோட்டார் வாகன சட்டத்திற்கு உட்பட்டு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட்டு சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அசோகன், செந்தில்வேலன், ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் உமாமகேஷ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் ரமேஷ், போக்குவரத்து கழக துணை மேலாளர் அரவிந்தன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குமார், செந்தில், போக்குவரத்து கழக கிளை மேலாளர் இளங்கோவன், பொறியாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story