வாகனம் மோதி மருத்துவக்கல்லூரி மாணவர் சாவு; நண்பர் காயம்


வாகனம் மோதி மருத்துவக்கல்லூரி மாணவர் சாவு; நண்பர் காயம்
x
தினத்தந்தி 4 Feb 2019 9:30 PM GMT (Updated: 4 Feb 2019 6:53 PM GMT)

காஞ்சீபுரத்தில் உள்ள நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மருத்துவக்கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்த மற்றொரு மருத்துவக்கல்லூரி மாணவர் காயமடைந்தார்.

சென்னை,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தர்கா, கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் குணசேகர் (வயது 21). இவர் காஞ்சீபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு படித்து வந்தார். மேலும் அதே கல்லூரியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சோமசேகர ரெட்டி (20) என்ற முதலாம் ஆண்டு படிக்கும் மாணவரும் படித்து வருகிறார்.

நண்பர்கள் இருவரும் நேற்று மோட்டார்சைக்கிளில் காஞ்சீபுரம் சென்றுவிட்டு மீண்டும் கல்லூரிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மாணவர் குணசேகர் தூக்கிவீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த மற்றொரு மாணவரான சோமசேகர ரெட்டி படுகாயமடைந்தார். உடனே அருகிலுள்ளவர்கள் படுகாயமடைந்த சோமசேகர ரெட்டியை மீட்டு, தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து மோதிய வாகனத்தை தேடி விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story