சங்ககிரி, கன்னங்குறிச்சியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் 2 பேர் கைது


சங்ககிரி, கன்னங்குறிச்சியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 Feb 2019 11:07 PM GMT (Updated: 5 Feb 2019 11:07 PM GMT)

சேலம் மாவட்டம் சங்ககிரி, கன்னங்குறிச்சியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சங்ககிரி,

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே செங்கான்வளவு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 34), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் அதேபகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஒரு மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அந்த சிறுமி அழுது கதறினார். இதனால் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். பிறகு ஆட்கள் வருவதை பார்த்த சங்கர், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

இதையடுத்து சிறுமியை மீட்டு பார்த்தபோது, அவளது உதட்டில் இருந்து ரத்தம் வந்தது. உடனே அரசு ஆஸ்பத்திரியில் சிறுமி சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தரப்பில் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சங்கரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இதேபோல் கன்னங்குறிச்சி பகுதியில் மற்றொரு சம்பவம் நடந்தது. சேலம் கன்னங் குறிச்சி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் செல்வராஜ் (27). கட்டிட மேஸ்திரியான இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் ஒருவரின் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி கதறி அழுததால் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய், கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக செல்வராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


Next Story