பூலாம்பட்டியில் ஆக்கிரமிப்பு வீடு, கடைகள் அகற்றம்


பூலாம்பட்டியில் ஆக்கிரமிப்பு வீடு, கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 6 Feb 2019 10:30 PM GMT (Updated: 6 Feb 2019 4:22 PM GMT)

பூலாம்பட்டியில் ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் இடித்து அகற்றப் பட்டன.

எடப்பாடி, 

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் பூலாம்பட்டி-மேட்டூர் செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் சிலர் ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டியிருந்தனர். இதனால் லாரி, பஸ், கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள நெடுஞ்சாலைத்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய் துறை மூலம் நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சங்ககிரி உதவி கலெக்டர் (பொறுப்பு) வேடியப்பன், தாசில்தார் கேசவன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அசோக் குமார், உட்கோட்ட பொறியாளர் கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் அகற்றும் பணி நடந்தது. பொக்லைன் எந்திரத்தின் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் அகற்றப்பட்டன.

இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story