பெண் வார்டர் தற்கொலை வழக்கு: கைதான சிறை வார்டர் பணியிடை நீக்கம் தலைமறைவான 2 பேரை பிடிக்க தனிப்படையினர் தீவிரம்


பெண் வார்டர் தற்கொலை வழக்கு: கைதான சிறை வார்டர் பணியிடை நீக்கம் தலைமறைவான 2 பேரை பிடிக்க தனிப்படையினர் தீவிரம்
x
தினத்தந்தி 6 Feb 2019 11:15 PM GMT (Updated: 6 Feb 2019 7:44 PM GMT)

திருச்சி பெண் சிறை வார்டர் தற்கொலை வழக்கில் கைதான காதலனும், வார்டருமான வெற்றிவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தலைமறைவான 2 பேரை பிடிக்க தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருச்சி,

கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்லப்பனின் மகள் செந்தமிழ்செல்வி (வயது 23). திருச்சி பெண்கள் சிறையில் வார்டராக பணியாற்றி வந்த இவர், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் கடந்த 3-ந்தேதி தூக்கில் தொங்கினார். திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி வரும் வெற்றிவேல் (24), அவரை காதலித்துவிட்டு ஏமாற்றியதால் செந்தமிழ்செல்வி தற்கொலை செய்துகொண்டார்.

அதே சிறையின் வார்டரான வெற்றிவேலின் அண்ணன் கைலாசமும், திருச்சி பெண்கள் சிறையின் வார்டரான வெற்றிவேலின் அண்ணி ராஜசுந்தரியும், செந்தமிழ்செல்வியை சாதியின் பெயரை சொல்லி திட்டியதாகவும், அதனாலும் அவர் தற்கொலை முடிவை எடுத்ததாக செந்தமிழ்செல்வியின் தந்தை செல்லப்பன் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக வெற்றிவேல் உள்பட அவரது அண்ணன், அண்ணி ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவாக இருந்த வெற்றிவேலை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து லால்குடி கிளை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கைதான வெற்றிவேல் மீது திருச்சி மத்திய சிறை சூப்பிரண்டு முருகேசன் துறைரீதியான நடவடிக்கை எடுத்தார். அவரது உத்தரவின்பேரில் வார்டர் வெற்றிவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதேபோல தலைமறைவான வார்டர் கைலாசம், அவரது மனைவியும் வார்டரான ராஜசுந்தரி ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தலைமறைவாக உள்ள அவர்கள் 2 பேரையும் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 

Next Story