சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்மீன் வியாபாரிக்கு 14 ஆண்டு சிறை


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்மீன் வியாபாரிக்கு 14 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 6 Feb 2019 10:45 PM GMT (Updated: 6 Feb 2019 8:20 PM GMT)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மீன் வியாபாரிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஏ.வள்ளியம் மேலத்தெருவை சேர்ந்தவர் கண்ணுசாமி. இவருடைய மகன் சின்னதுரை (வயது 34). மீன் வியாபாரி.

கடந்த 7.3.2017 அன்று அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் 15 வயது சிறுமி தனியாக இருப்பதை அறிந்த சின்னதுரை, அந்த வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அந்த சிறுமியை அழைத்துக்கொண்டு அங்குள்ள பாப்பாத்தி அம்மன் கோவில் அருகில் உள்ள கரும்பு வயலுக்கு சென்றார். அங்கு அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்தார். அந்த ஜூசை குடித்தவுடன், சின்னதுரை அந்த சிறுமியிடம் எனக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை.

ஆகவே உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை சின்னதுரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் மயங்கிய அந்த சிறுமி சிறிது நேரம் கழித்து எழுந்தார். அப்போது அந்த சிறுமியிடம் இது பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.

இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் நடந்த சம்பவத்தை சொல்லவில்லை. இதை பயன்படுத்தி அந்த சிறுமியை சின்னதுரை பலமுறை மிரட்டி உல்லாசமாக இருந்தார். இதில் அந்த சிறுமி 3½ மாத கர்ப்பிணியானார். இது பற்றி அந்த சிறுமி சின்னதுரையிடம் கூறியபோது, அவர் சில மாத்திரைகளை கொடுத்துள்ளார். அதில் அவரது கர்ப்பம் கலைந்து விட்டதாக தெரிகிறது.

இதை அறிந்த அந்த சிறுமியின் தந்தை விருத்தாசலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னதுரையை கைது செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு கூறினார். அதில், இவ்வழக்கில் சின்னதுரை மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு பெற்றுக்கொடுக்க இலவச சட்ட உதவி மையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.

Next Story