பள்ளி மாணவி- காதலன் தற்கொலை காதலிப்பதை பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து உயிரை மாய்த்தனர்


பள்ளி மாணவி- காதலன் தற்கொலை காதலிப்பதை பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து உயிரை மாய்த்தனர்
x
தினத்தந்தி 6 Feb 2019 11:30 PM GMT (Updated: 6 Feb 2019 9:00 PM GMT)

சுசீந்திரம் அருகே காதலிப்பதை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி மற்றும் அவருடைய காதலன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

மேலகிருஷ்ணன்புதூர்,

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. கூலி தொழிலாளி. இவருடைய மகன் கட்டிட தொழிலாளியான அஜித் (வயது 20). இவர்களது வீட்டின் அருகே வசிப்பவர் சிவகுமார். கல் சிற்ப வேலை செய்து வருகிறார். சிவகுமார் மகள் 11-ம் வகுப்பு படிக்கும் ஆனந்திக்கும் (16), அஜித்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் உறவினர்கள் என்பதால் இவர்களது பழக்கத்தை அனைவரும் சாதாரணமாகத்தான் நினைத்தனர்.

காலப்போக்கில் இருவரும் காதலிப்பது தெரிய வந்தது. ஆனந்தி பள்ளிக்கூடம் செல்லும் போது தினமும் அஜித்தை சந்தித்து காதலை வளர்த்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியபடி இருந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. இரு வீட்டிலும் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அதாவது, இப்போது படிக்கிற வயது. எனவே படிப்பில் கவனம் செலுத்து என்று ஆனந்தியிடம் கூறியதுடன், செல்போனில் அஜித்துடன் பேசுவதையும் பெற்றோர் கண்டித்தனர். மேலும் அஜித்தை சந்தித்து பேசுவதற்கும் தடை விதித்துள்ளனர். இதேபோல் அஜித் வீட்டிலும், ஆனந்தியை சந்தித்து பேசுவதற்கு தடை விதித்ததுடன், செல்போனில் பேசுவதையும் கண்டித்துள்ளனர். இதனால் இருவரும் மனம் உடைந்தனர்.

பெற்றோர் நம்மை பிரித்து விடுவார்கள் என இருவரும் நினைத்துள்ளனர். நேற்று முன்தினம் ஆனந்தி பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அஜித்தும் வேலைக்கு செல்லவில்லையாம். இருவரும் செல்போனில் நீண்டநேரம் பேசியபடி இருந்துள்ளனர்.

அப்போதுதான் அவர்கள் விபரீதமான முடிவை எடுத்தனர். அதாவது, இருவரும் தற்கொலை செய்து கொள்வது என்று பேசியுள்ளனர். அப்போது அஜித், விஷத்தை தான் தயார் செய்து வருவதாகவும், இருவரும் குடித்து விட்டு உயிரை மாய்த்துக் கொள்வது என்றும் முடிவெடுத்துள்ளனர். அதன்படி அரளி விதையை அரைத்து விஷத்தை அஜித் தயார் செய்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலையில் அதை ஆனந்தியிடம் கொடுத்துள்ளார். அதன்பிறகு அஜித் அங்கிருந்து செங்கட்டி பாலம் பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அஜித் விஷத்தை குடித்துள்ளார். ஆனந்தி வீட்டில் வைத்து விஷத்தை குடித்துள்ளார்.

இருவரும் விஷம் குடித்த தகவலை ஒருவருக்கொருவர் பறிமாறிக் கொண்டனர். அதன்பிறகு இருவரும் நீண்டநேரம் செல்போனில் பேசியபடியே இருந்துள்ளனர். வீட்டில் இருந்த ஆனந்தி வாயில் நுரை தள்ளியபடி திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதைக்கண்ட அவருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனே ஆனந்தியை மீட்டு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஆனந்தி பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே அஜித், சுடுகாட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அஜித் பரிதாபமாக இறந்தார்.

அஜித், ஆனந்தி ஆகிய இருவரது உடல்களை பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கண்கலங்க செய்தது. இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளி மாணவியும், அவருடைய காதலனும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story