தூத்துக்குடியில் பெட்ரோல் ஊற்றி கார் எரிப்பு 2 பேருக்கு வலைவீச்சு


தூத்துக்குடியில் பெட்ரோல் ஊற்றி கார் எரிப்பு  2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Feb 2019 9:45 PM GMT (Updated: 7 Feb 2019 12:19 PM GMT)

தூத்துக்குடியில் பெட்ரோல் ஊற்றி கார் எரிக்கப்பட்டது தொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பெட்ரோல் ஊற்றி கார் எரிக்கப்பட்டது தொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பலசரக்கு கடை

தூத்துக்குடி தாளமுத்துநகர் மாதாநகரை சேர்ந்தவர் மாடசாமி (வயது 39). இவர் பலசரக்கு கடை வைத்து உள்ளார். இவருடைய நண்பர் கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த சிவா. நேற்று முன்தினம் சிவாவின் காரை மாடசாமி ஓட்டிவந்து தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்.

புதியம்புத்தூரைச் சேர்ந்தவர் முருகேசன். இவருக்கும் மாடசாமிக்கு இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

பெட்ரோல் ஊற்றி எரிப்பு

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் முருகேசன் தனது நண்பர் தமிழ்மணி என்பவருடன் ஒரு காரில் மாடசாமி வீட்டுக்கு வந்தார். அவர் மாடசாமியை வீட்டுக்கு வெளியே வரச்சொல்லி தகராறு செய்தார். அவர் வெளியே வராததால், தனது காரில் வைத்து இருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து மாடசாமி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட சிவாவின் காரில் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் வருவதை அறிந்த அவர்கள் 2 பேரும் அங்கு இருந்து காரில் சென்று விட்டனர். இதில் காரின் முன்பக்கம் தீயில் கருகி நாசமானது.

இதுகுறித்து மாடசாமி கொடுத்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சங்கர், முருகேசன், தமிழ்மணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றார்.


Next Story