என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆண்டு விழா ரங்கசாமி கொடியேற்றினார்


என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆண்டு விழா ரங்கசாமி கொடியேற்றினார்
x
தினத்தந்தி 7 Feb 2019 10:44 PM GMT (Updated: 7 Feb 2019 10:44 PM GMT)

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆண்டுவிழாவினையொட்டி கட்சிக்கொடியை ரங்கசாமி ஏற்றி வைத்தார்.

புதுச்சேரி,

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 9-வது ஆண்டு தொடக்கவிழா ஜவகர் நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. விழாவுக்கு பொதுச்செயலாளர் பாலன் தலைமை தாங்கினார்.

விழாவில் கட்சியின் நிறுவன தலைவர் ரங்கசாமி கலந்துகொண்டு கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் தேசிய தலைவர்களின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அவருக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

விழாவில் ராதா கிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜே.ஜெயபால், திருமுருகன், டி.பி.ஆர்.செல்வம், சுகுமாறன், கோபிகா, சந்திரபிரியங்கா, முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம், தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. நேரு, முன்னாள் வாரிய தலைவர்கள் வேல்முருகன், பாலமுருகன், பாஸ்கர், லூயி கண்ணையா, ஞானசேகரன், டாக்டர் நாராயணசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் தொகுதிதோறும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. தொகுதி முக்கிய நிர்வாகிகள் கட்சிக்கொடியேற்றி இனிப்புகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.

மங்கலம் சட்டமன்ற தொகுதி கோட்டைமேடு கிராமத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சியின் 9-ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கட்சி அலுவலகத்தில் மங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. சுகுமாறன் கட்சிக் கொடியேற்றினார். தொடர்ந்து தொண்டர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சுகுமாறன் எம்.எல்.ஏ. மோட்டார் சைக்கிளில் புதுவை ரெட்டியார்பாளையத்தில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அவருடைய ஆதரவாளர்களும் அவரை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் வாரியத் தலைவர் பாலமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருபுவனை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சார்பில் கட்சியின் 9-வது ஆண்டு விழா திருவண்டார்கோவில் பஸ் நிறுத்தம் அருகே கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் திருபுவனை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோபிகா கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்தார். மேலும் கட்சி தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திருபுவனை தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Next Story