எடியூரப்பா பேரம் பேசுவதுபோல் ஆடியோ குமாரசாமி வெளியிட்டார்; பரபரப்பு குற்றச்சாட்டு


எடியூரப்பா பேரம் பேசுவதுபோல் ஆடியோ குமாரசாமி வெளியிட்டார்; பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Feb 2019 10:45 PM GMT (Updated: 8 Feb 2019 6:58 PM GMT)

ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.வை இழுக்க எடியூரப்பா பேரம் பேசுவது போன்ற ஆடியோவை முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் மந்திரி பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி மீதும், கட்சி மீதும் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சி அமைக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. இதற்காக பா.ஜனதா ஆபரேஷன் தாமரை திட்டத்தை செயல்படுத்தி வருவதாக கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், கூட்டணி ஆட்சி மீது அதிருப்தியில் உள்ள காங்கிரசை சேர்ந்த ரமேஷ்ஜார்கிகோளி, உமேஷ் ஜாதவ், கணேஷ், மகேஷ் கமடள்ளி ஆகிய 4 பேரும் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பில் இல்லாமல் இருந்து வருகிறார்கள். அவர்கள் 4 பேரும் பா.ஜனதாவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவரும், மண்டியா கே.ஆர்.பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான நாகனகவுடா கடந்த 2 நாட்களாக மாயமாகி உள்ளார். அவரும் பா.ஜனதாவில் இணைய இருப்பதாகவும், அதனால் அவர் மும்பை சென்று இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் கர்நாடக சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். முன்னதாக அவசரம், அவசரமாக குமாரசாமி பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அவர் பத்திரிகையாளர்களிடம், ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ. நாகனகவுடாவை இழுக்க பா.ஜனதாவினர் பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்ைட கூறினார். மேலும் இந்த பேரம் தொடர்பான ஆடியோவை அவர் வெளியிட்டார்.

அந்த ஆடியோவில் நாகனகவுடா எம்.எல்.ஏ.வை பா.ஜனதாவுக்கு இழுக்க அவரது மகன் ஷரண் கவுடாவுடன் எடியூரப்பா பேரம் பேசுவது இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா முயற்சி செய்து வருகிறார். எங்கள் கட்சியை சேர்ந்த நாகனகவுடா எம்.எல்.ஏ.வை இழுக்க அவரது மகன் ஷரண் கவுடாவுடன் எடியூரப்பா இன்று (அதாவது நேற்று) அதிகாலையில் செல்போனில் பேரம் பேசியுள்ளார்.

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் கர்நாடக பா.ஜனதாவினரின் நடவடிக்கை பிரதமர் மோடிக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை. இதற்கு் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் தான் காரணம். எனவே இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி தெளிவுப்படுத்த வேண்டும்.

இந்த ஆடியோ பதிவு பிரதமர் மோடிக்கு அனுப்பிவைக்கப்படும். கூட்டணி அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இதுவரை மத்திய அரசு கர்நாடகத்திற்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story