ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் 8,700 டன் உளுந்து, பச்சைபயறு கொள்முதல் செய்ய இலக்கு


ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் 8,700 டன் உளுந்து, பச்சைபயறு கொள்முதல் செய்ய இலக்கு
x
தினத்தந்தி 8 Feb 2019 10:45 PM GMT (Updated: 8 Feb 2019 9:28 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் 8 ஆயிரத்து 700 டன் உளுந்து, பச்சை பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அண்ணாதுரை கூறினார். தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர்,

வேளாண் உற்பத்தியினை பெருக்கி, விவசாயப் பெருமக்களின் வருமானத்தினை உயர்த்துவதற்கு தமிழக அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டின் சென்ற பருவத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த பயிறு வகைகளை மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மாநிலம் முழுவதும் 1,548 டன் உளுந்து மற்றும் 365 டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் 1,767 விவசாயிகள் நேரடியாக பயனடைந்ததோடு, இத்தகைய பயிறு வகைகளின் சந்தை விலை உயர்ந்ததால், அனைத்து பயறு விவசாயிகளுக்கும் லாபகரமான விலை கிடைத்தது.

இதே போல், நடப்பு 2018-19 ஆம் ஆண்டு ராபி பருவத்திலும் பயிறு வகை விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்தில், மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து மற்றும் பச்சைபயறு கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டையில் உள்ள ஒழுங்குமறை விற்பனைக்கூடங்கள் மூலமாக உளுந்து 7 ஆயிரம் டன் மற்றும் பச்சைபயறு 1700 டன் என மொத்தம் 8 ஆயிரத்து 700 டன் கொள்முதல் செய்ய இலக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

உளுந்து மற்றும் பச்சை பயறுக்கு நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து ஈரப்பதம் 12 சதவீதத்திற்குள் இருக்குமாறு நன்கு காயவைத்து கொண்டு வர வேண்டும். இவ்வாறு நன்கு காயவைத்து தரமுள்ள உளுந்து கிலோ ஒன்றிற்கு ரூ.56 வீதமும், பச்சை பயறு கிலோ ஒன்றிற்கு ரூ.69.75 வீதமும், கொள்முதல் செய்யப்படும். உளுந்து மற்றும் பச்சை பயறுக்கு கிரயம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

தஞ்சை மாவட்டத்தில் உளுந்து மற்றும் பச்சை பயறு கொள்முதல் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் தொடங்கி ஜூன் 30-ந்தேதி வரை கொள்முதல் செய்யப்படும். இத்திட்டதின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி பதிவு செய்து தங்களது உளுந்து மற்றும் பச்சைபயறை விற்பனை செய்யலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Next Story