குடிநீர் வழங்க சொரக்காய்பேட்டையில் ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


குடிநீர் வழங்க சொரக்காய்பேட்டையில் ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 9 Feb 2019 11:00 PM GMT (Updated: 9 Feb 2019 8:26 PM GMT)

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் குடிநீர் வழங்க சொரக்காய்பேட்டை கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதற்காக ரூ.7 லட்சம் செலவில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்க அரசு ஒப்புதல் பெறப்பட்டது. ஒப்பந்தகாரர் இந்த ஆழ்துளை கிணறுகளை சொரக்காய்பேட்டை கிராமம் ஒட்டி செல்லும் கொசஸ்தலை ஆற்றில் நேற்று முன்தினம் அமைக்க சென்றார்.

ஆற்றில் 20 அடி ஆழத்தில் கிணறு தோண்டிய நிலையில் சொரக்காய்பேட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஒப்பந்தகாரர் அத்துடன் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை நிறுத்தி விட்டு அங்கிருந்து வெளியேறினார்.

இருப்பினும் சமாதானம் அடையாத இந்த கிராம மக்கள் நேற்று காலை தங்கள் கிராமத்திற்கு வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் கிடைத்ததும் பொதட்டூர்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். பஸ்சை சிறை பிடித்தவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் கோரிக்கையை உரிய அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து சிறை பிடித்த பஸ்சை விடுவித்தனர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து பொதட்டூர்பேட்டை செயல் அலுவலர் ரவியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ரூ.7 லட்சம் செலவில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது உண்மைதான். ஆனால் அந்த ஆழ்துளை கிணறுகள் கொசஸ்தலை ஆற்றில் அமைக்கும் எண்ணம் இல்லை. அவை பொதட்டூர்பேட்டை பகுதியில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story