ஆலத்தூரில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 20 பேர் காயம்


ஆலத்தூரில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 20 பேர் காயம்
x
தினத்தந்தி 9 Feb 2019 10:45 PM GMT (Updated: 9 Feb 2019 8:41 PM GMT)

ஆலத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை அடுத்த ஆலத்தூரில் உள்ள நீலியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதி கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அதற்கான பணிகள் நிறைவு பெற்றது. இதையொட்டி நீலியம்மன் கோவில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து ஜல்லிக்கட்டை அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் கணேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

786 காளைகள்

இதில் 299 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டின. அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை முட்டி தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 786 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

20 பேர் காயம்

காளைகள் முட்டி தள்ளியதில் வேளாங்கால்பட்டியை சேர்ந்த ரவி (வயது 23), அன்னவாசலை சேர்ந்த ராஜேஷ் (32), செங்குறிச்சியை சேர்ந்த அஜீத் (21), காலாடிப்பட்டியை சேர்ந்த அருணாச்சலம் (17), ஆலத்தூரை சேர்ந்த பாலு (19), செங்குறிச்சியை சேர்ந்த பார்வையாளர் பாலு (35) உள்பட மொத்தம் 20 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த ரவி உள்பட 3 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பரிசு பொருட்கள்

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடி படாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், கட்டில், பீரோ, சைக்கிள், சில்வர் பாத்திரம், ஹெல்மெட், குத்துவிளக்கு, செல்போன், வாளி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியை காண திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர், அன்னவாசல், இலுப்பூர் என சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஆலத்தூர் மற்றும் சுற்றுவட்டார ஐந்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.

பாதுகாப்பு

ஜல்லிக்கட்டு போட்டி நிபந்தனைகளின் படி முறையாக நடைபெறுகிறதா என்பதை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தனர். இதில் இலுப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story