சிங்கம்பட்டியில் சாமி சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு


சிங்கம்பட்டியில் சாமி சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Feb 2019 11:00 PM GMT (Updated: 9 Feb 2019 8:49 PM GMT)

சிங்கம்பட்டியில் சாமி சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தரகம்பட்டி,

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம் சிங்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற வந்தவழி கருப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்றுமுன்தினம் வழக்கம் போல் கோவில் பூசாரிகள் பூஜை செய்து விட்டு மாலையில் வீட்டிற்கு சென்று விட்டனர். பின்னர் நேற்று காலை கோவிலுக்கு வந்தனர்.

அப்போது கோவிலில் இருந்த கருப்பசாமி சிலை உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதன் அருகில் இருந்த சுயம்பு வடிவிலான சாமி பீடத்தையும் காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது பற்றி அறிந்ததும் கிராமமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பாலவிடுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கோவிலில் இருந்து மோப்பம் பிடித்தவாறு சிறிது தூரம் ஓடி சென்று படுத்து கொண்டது.

யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து கோவில் அறங்காவலர் வெள்ளைச்சாமி கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story