குளித்தலை, க.பரமத்தி பகுதிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


குளித்தலை, க.பரமத்தி பகுதிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 9 Feb 2019 10:45 PM GMT (Updated: 9 Feb 2019 8:58 PM GMT)

குளித்தலை, க.பரமத்தி பகுதிகளில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலையில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி போக்குவரத்துத்துறை, காவல்துறை, போக்குவரத்து போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை குளித்தலை கோட்டாட்சியர் லியாகத் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் குளித்தலை வட்டார போக்குவரத்து வாகன இன்ஸ்பெக்டர் (ஆய்வாளர்) கோவிந்தராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், போக்குவரத்து போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளித்தலை சுங்ககேட்டில் இருந்து தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று காந்திசிலை அருகே முடிவடைந்தது. இதில் போலீசார், ஊர்காவல்படையினர் உள்ளிட்டோர் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் சென்று பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதேபோல குளித்தலை அரசு கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி தொடங்கி வைத்தார். இதில் மின்னணுவியல் துறைத்தலைவர் அன்பரசு குளித்தலை போலீஸ் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

க.பரமத்தி போலீசார் மற்றும் சேரன் பொறியியல் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை க.பரமத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் முத்துசாமி, இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாணவ, மாணவிகள் கோஷமிட்டு, பதாகை களை கையில் ஏந்தி கல்லூரியில் இருந்து கடைவீதி வரை ஊர்வலமாக வந்தனர். இதில் கல்லூரி முதல்வர் மகுடீஸ்வரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், க.பரமத்தி போலீசார் கலந்து கொண்டனர்.

இதேபோல் சின்னதாரா புரம் போலீசார் மற்றும் சரஸ்வதி வித்யாலயா பள்ளி சார்பில் நடந்த ஊர்வலத்தை, சின்னதாராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஊர்வலம் வடக்கு ரோட்டில் ஆரம்பித்து கடைவீதி வழியாக பஸ் நிலையம் வந்தது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன், பள்ளி தாளாளர் சின்னதம்பி, மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story