தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு


தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Feb 2019 10:15 PM GMT (Updated: 10 Feb 2019 7:29 PM GMT)

தஞ்சை பழைய பஸ்நிலையத்தில் பஸ் ஏற முயன்ற பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த ரெட்டிப்பாளையம் அருகே உள்ள சக்காராபேட்டையைச் சேர்ந்தவர் வேலு. இவருடைய மகள் பிரியா (வயது 22). இவர் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். தினமும் பஸ்சில் வேலைக்கு வந்து விட்டு பஸ்சில் வீடு திரும்புவது வழக்கம்.

சம்பவத்தன்று வேலை முடிந்த பின்னர் பிரியா வீட்டிற்கு செல்வதற்காக தஞ்சை பழைய பஸ் நிலையம் வந்தார். அங்கு நின்று கொண்டிருந்த பஸ்சில் ஏற முயன்றார். அப்போது பஸ்சின் அருகே நின்று கொண்டிருந்த 2 மர்ம நபர்கள் பிரியா கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடினர்.

போலீஸ் வலைவீச்சு

இதனைப்பார்த்த பிரியா திருடன், திருடன் என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் 2 பேரும் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து பிரியா தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story