கொசூர் கடைவீதியில் மொபட் மீது லாரி மோதல்; சிறுவன் பலி தாய்-சகோதரி படுகாயம்


கொசூர் கடைவீதியில் மொபட் மீது லாரி மோதல்; சிறுவன் பலி தாய்-சகோதரி படுகாயம்
x
தினத்தந்தி 10 Feb 2019 10:15 PM GMT (Updated: 10 Feb 2019 8:41 PM GMT)

கொசூர் கடைவீதியில் மொபட் மீது லாரி மோதியதில் சிறுவன் பலியானார். அவரது தாய்-சகோதரி படுகாயமடைந்தனர்.

தோகைமலை,

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள மத்தகிரி ஊராட்சி ஆத்துப்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன். இவருக்கு திருமணமாகி அம்சவள்ளி என்ற மனைவியும், கோமதி (வயது 7) என்ற மகளும், கதிர்வேல் (4) என்ற மகனும் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று அம்சவள்ளி பெருமாள்கவுண்டன்பட்டியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் மொபட்டில் சென்று விட்டு, பின்னர் அதே மொபட்டில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். மொபட்டை அம்சவள்ளி ஓட்டினார், கோமதி, கதிர்வேல் ஆகியோர் மொபட்டில் அமர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

கொசூர் கடைவீதியில் வந்து கொண்டிருந்தபோது, முன்னால் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. இதனை அம்சவள்ளி கடந்து சென்றார். அப்போது எதிரே கோயம்புத்தூரில் இருந்து பெட்ரோல் ஏற்றி கொண்டு வந்த ஒரு லாரி மொபட் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அம்சவள்ளி, கோமதி ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயமடைந்த அம்சவள்ளி, கோமதி ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிறுவன் கதிர்வேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து முனியப்பன் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story