140 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட ரூ.6¼ லட்சம் நிதி ஒதுக்கீடு முதன்மைக்கல்வி அதிகாரி தகவல்


140 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட ரூ.6¼ லட்சம் நிதி ஒதுக்கீடு முதன்மைக்கல்வி அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 10 Feb 2019 10:37 PM GMT (Updated: 10 Feb 2019 10:37 PM GMT)

மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட ரூ.6 லட்சத்து 32 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை,

முதன்மைக்கல்வி அதிகாரி பரலுமுத்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஒருங்கிணைந்த கல்வியின் குறிக்கோள்கள் மற்றும் செயல்பாடுகள், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் குறித்து மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் மற்றும் பொது மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பள்ளிகளுடனான பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும் மற்றும் பள்ளி குழந்தைகளின் தனித்திறன்களை மேம்படுத்தவும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆண்டு விழாக்களை கொண்டாட திட்டமிடப்பட்டு மாநில திட்ட இயக்குனரகம் மூலம் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் 104 அரசு தொடக்கப்பள்ளிகளுக்கு தலா ரூ.4,000 வீதமும், 36 அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.6,000 வீதமும் என மொத்தம் 140 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ.6 லட்சத்து 32 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுடன் கலந்தாலோசித்து பள்ளி ஆண்டு விழா நடத்தப்படும் தேதியினை முடிவு செய்து அதற்கான முன்னேற்பாடுகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். பள்ளி ஆண்டு விழாவின்போது நடத்தப்படும் நிகழ்ச்சிகள், கலை மற்றும் பண்பாடு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்த கல்வியின் குறிக்கோள்கள் மற்றும் செயல்பாடுகள், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் குறித்து விளக்குவதாகவும், பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர்வதாகவும் அமைந்திருக்க வேண்டும்.

பள்ளி ஆண்டு விழாவில் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கட்டாயம் பங்கு பெற செய்தல் வேண்டும். கூடுதலாக அப்பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வியாளர்களையும் பங்குபெற செய்யலாம். மேற்படி கூடுதலான பள்ளிகள் மற்றும் கூடுதலாக செலவின தொகை தேவைப்படும் நிலையில் அருகிலுள்ள தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து விருப்பத்திற்கேற்ப நன்கொடையாக பெற்று பள்ளிகளில் ஆண்டு விழாக்களை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும்.

இவ்வறு அவர் கூறியுள்ளார்.


Next Story