பர்கூர் அருகே 200 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா


பர்கூர் அருகே 200 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா
x
தினத்தந்தி 11 Feb 2019 10:30 PM GMT (Updated: 11 Feb 2019 5:07 PM GMT)

பர்கூர் அருகே 200 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா நடைபெற்றது.

பர்கூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த சத்தலப்பள்ளியில் நேற்று எருது விடும் விழா நடந்தது. இதற்காக வேலூர் மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகளை அலங்கரித்து கொண்டு வந்திருந்தனர். இதைத் தொடர்ந்து காளைகள் மைதானத்தில் அவிழ்த்து விடப்பட்டு விழா நடைபெற்றது.

அப்போது காளைகள் துள்ளிக்குதித்தும், சீறிப்பாய்ந்தும் மின்னல் வேகத்தில் ஓடி சென்றன. இதனை கண்டு அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் ஆர்வமிக்க இளைஞர்கள் சிலர் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த வண்ண பதாகைகளை பறிக்க முயன்றனர்.

இதில் சிலர் கீழே விழுந்து லேசான காயம் அடைந்தனர். குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் மொத்தம் 25 பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதன்படி, வேலூர் மாவட்டம் கத்தேரியைச் சேர்ந்த கரப்பன் என்பவரது காளை முதல் பரிசாக 55 ஆயிரத்து 555 ரூபாயை வென்றது. இரண்டாவது பரிசாக பர்கூர் அடுத்த பி.ஆர்.சி. மாதேப்பள்ளியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் காளை 44 ஆயிரத்து 444 ரூபாயை வென்றது. மூன்றாவது பரிசாக வேலூர் மாவட்டம் பி. கொத்தூரை சேர்ந்த ராமூர்த்தி என்பவரின் காளை 33 ஆயிரத்து 333 ரூபாயை வென்றது. 25-வது பரிசாக 2,222 ரூபாய் வரை காளைகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த எருது விடும் விழாவை காண பர்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் வந்திருந்தனர். இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story