சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்


சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 Feb 2019 10:30 PM GMT (Updated: 11 Feb 2019 6:59 PM GMT)

வேலூரை அடுத்த பொய்கை மோட்டூரில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

வேலூர், 

போக்குவரத்து விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கடந்த 4-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி வேலூர் மாவட்ட போக்குவரத்துத்துறை மற்றும் மாவட்ட போக்குவரத்து போலீஸ் சார்பில் பல்வேறு பகுதிகளில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும், விபத்தில்லா பயணம் மேற்கொள்ள வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்பட்டது.

அதேபோன்று மாணவர்கள் போக்குவரத்து விதிகளை அறிந்து கொள்ளும் விதமாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கருத்தரங்குகள், மாணவ-மாணவிகள், டிரைவர்களுக்கு மருத்துவ முகாம், மினி மாரத்தான் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.

சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு ஊர்வலம் வேலூரை அடுத்த பொய்கை மோட்டூரில் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், தேசிய நெடுஞ்சாலை திட்ட மேலாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் ராமன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

ஊர்வலம் பொய்கை மோட்டூரில் தொடங்கி சென்னை-பெங்களூரு சர்வீஸ் சாலை வழியாக சென்று பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே நிறைவடைந்தது. இதில் தேசிய நெடுஞ்சாலை ஊழியர்கள், பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி சென்று போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், சாலை இயக்க தலைமை அலுவலர் ஜஸ்டின் சாமுவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story