ஆதம்பாக்கத்தில் சோகம்: தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் சாவு


ஆதம்பாக்கத்தில் சோகம்: தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் சாவு
x
தினத்தந்தி 11 Feb 2019 10:45 PM GMT (Updated: 11 Feb 2019 7:59 PM GMT)

ஆதம்பாக்கத்தில், தந்தை இறந்த தகவல் கேட்டு அதிர்ச்சியில் மகனும் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் தெற்கு பிரதான சாலையை சேர்ந்தவர் வஜ்ஜிரவேலு(வயது 61). இவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வஜ்ஜிரவேலு உயிரிழந்தார். அவரது உடல், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

வஜ்ஜிரவேலுவின் மகன் சுரேஷ்(40). இவரும், உடல்நலம் பாதிக்கப்பட்டு அதே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் தந்தைக்கு இறுதிச்சடங்குகள் செய்வதற்காக மருத்துவமனையில் இருந்து சுரேசை வீட்டுக்கு அழைத்து வந்தனர். அதன்பிறகுதான் அவருக்கு, தந்தை வஜ்ஜிரவேலு இறந்த தகவலை உறவினர்கள் தெரிவித்தனர். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ், வரும் வழியில் வாகனத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், தந்தை-மகன் இருவருக்கும் இறுதிச்சடங்குகள் நடத்தி, இருவரின் உடலையும் ஆதம்பாக்கம் பாலகிருஷ்ணாநகர் எரிமேடையில் எரியூட்டினர். தந்தை இறந்த தகவல்கேட்டு அதிர்ச்சியில் மகனும் மரணமடைந்த சம்பவம் ஆதம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story