பழைய சென்னை-திருச்சி சாலையில் சமயபுரம் பகுதி நான்கு வழி அணுகு சாலையாக மாறுகிறது


பழைய சென்னை-திருச்சி சாலையில் சமயபுரம் பகுதி நான்கு வழி அணுகு சாலையாக மாறுகிறது
x
தினத்தந்தி 11 Feb 2019 11:00 PM GMT (Updated: 11 Feb 2019 8:28 PM GMT)

பழைய சென்னை- திருச்சி சாலையில் உள்ள சமயபுரம் பகுதி நான்கு வழி அணுகு சாலையாக மாறுகிறது. இதற்காக பெருவளை வாய்க்காலில் தண்ணீர் குறைந்ததும் பாலம் கட்டுமான பணி தொடங்கப்பட இருக்கிறது.

திருச்சி, 

தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோவில். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் சமயபுரம் அமைந்து உள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா, பூச்சொரிதல் விழா, பஞ்சப்பிரகார விழா, மகாளய அமாவாசை போன்ற திருவிழா காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

மேலும் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காகவும், இரவில் கோவில் வளாகத்தில் தங்குவதற்காகதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாத யாத்திரையாக வந்து, அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டபோது சமயபுரத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது. மேம்பாலத்தின் வழியாகவே அனைத்து பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் கார் போன்ற வாகனங்களும் செல்கின்றன.தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மற்றும் திருச்சி மார்க்கங்களில் இருந்து வரும் வாகனங்கள் சமயபுரத்திற்கு இறங்கி செல்வதற்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியில் மட்டுமே அணுகு சாலை உள்ளது.

மேம்பாலத்தின் இன்னொரு பகுதியான பழைய சென்னை-திருச்சி சாலை அணுகு சாலையாக மாற்றி அமைக்கப்படவில்லை. இதனால் அந்த சாலையின் வழியாக திருச்சிக்கு செல்ல முடியாது. திருச்சி மார்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்றால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை அடைந்து ‘யூ டர்ன்’ போடவேண்டும். இப்படி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ‘யூ டர்ன்’ போடும்போது அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.

எனவே, சமயபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதியும், சமயபுரம் சுற்றுவட்டார கிராம மக்களின் நலன் கருதியும் பெருவளை வாய்க்காலில் ஒரு பாலம் கட்டி பழைய சென்னை-திருச்சி சாலையை நான்கு வழி பாதையுடன் கூடிய அணுகு சாலையாக மாற்றி அதனை மேம்பாலம் முடியும் இடத்தில் இணைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை ஆகும்.

இந்த கோரிக்கையை ஏற்று பழைய சென்னை-திருச்சி சாலையை ரூ.2 கோடியில் நான்கு வழி அணுகு சாலையாக மாற்ற தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. பெருவளை வாய்க்காலில் தண்ணீர் குறைந்தவுடன் 23 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டப்படும். கட்டுமான பணி தொடங்கிய 6 மாத காலத்தில் சாலை அமைக்கும் பணி நிறைவடையும் என்று நெடுஞ்சாலைத்துறையின் திருச்சி கோட்ட பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Next Story