கொளத்தூர் அருகே பெண் கொலை: ‘வைக்கோல் போரை தீ வைத்து எரித்ததால் தலையில் கல்லைப்போட்டு கொன்றோம்’ கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்


கொளத்தூர் அருகே பெண் கொலை: ‘வைக்கோல் போரை தீ வைத்து எரித்ததால் தலையில் கல்லைப்போட்டு கொன்றோம்’ கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 11 Feb 2019 9:30 PM GMT (Updated: 11 Feb 2019 9:02 PM GMT)

கொளத்தூர் அருகே வைக்கோல் போரை தீ வைத்து எரித்ததால் தலையில் கல்லைப்போட்டு கொன்றோம் என்று பெண்ணை கொன்ற வழக்கில் கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கொளத்தூர், 

கொளத்தூர் அருகே உள்ள கருங்கரடு என்ற இடத்தில் ஓடும் காவிரி ஆற்றில் கடந்த 9-ந் தேதி நிர்வாண நிலையில் ஒரு பெண் பிணமாக மிதந்தார். இது குறித்து கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து, அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் கொளத்தூர் அருகே உள்ள காளையனூரை சேர்ந்த பழனியம்மாள் (வயது 40) என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவரை கொன்று, உடலில் கல்லை கட்டி காவிரி ஆற்றில் வீசியது தெரிந்தது. போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கொளத்தூர் போலீசார் தண்டாரோடு என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் போலீசார் நிற்பதை பார்த்து, திரும்பி சென்றனர். இதனால் போலீசார் சந்தேகத்தின் பேரில் அவர்களை விரட்டி பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் காளையனூரை சேர்ந்த மாரியப்பன் என்கிற வெள்ளையன் (40), கருங்கல்லூரை சேர்ந்த மாது என்கிற மாதப்பன் (50), மேட்டுப்பனையூரை சேர்ந்த சுப்பு என்கிற சுப்பிரமணி (39) என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து பழனியம்மாளை கொலை செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:-

காளையனூரில் வெள்ளையனுக்கு சொந்தமான வைக்கோல் போர் இருந்தது. அதனை சில நாட்களுக்கு முன்பு பழனியம்மாள் தீ வைத்து எரித்து விட்டார். இது வெள்ளையனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் நாங்கள் 3 பேரும் சேர்ந்து பழனியம்மாளை கொலை செய்ய முடிவு செய்தோம். இதற்காக சம்பவத்தன்று அங்குள்ள குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த பழனியம்மாள் தலையில் கல்லைப்போட்டு கொன்றோம்.

பின்னர் உடலில் இருந்த ஆடைகளை அகற்றிவிட்டு, வயிற்றை கத்தியால் கிழித்து, உள்ளே இருந்த குடலை எடுத்து வீசினோம். பிறகு வயிற்றுப்பகுதியில் கல்லை வைத்து கட்டி, ஆற்றில் வீசினோம். நாங்கள் உடல் ஆற்றுக்குள் மூழ்கி விடும் என்று நினைத்தோம். ஆனால் உடல் ஆற்றில் மிதந்து விட்டது. இதனால் போலீசார் விசாரணையில் சிக்கி விட்டோம்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தொடர்ந்து நேற்று மாலை கைதான வெள்ளையன், மாதப்பன், சுப்பிரமணி ஆகியோரை போலீசார் மேட்டூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கைதான மாதப்பன் ஏற்கனவே அதே பகுதியில் ஒருவரை கொலை செய்த வழக்கில் கைதானவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story