கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை முயற்சி, தங்கதமிழ்செல்வன் அண்ணன் உள்பட 4 பேர் மீது வழக்கு


கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை முயற்சி, தங்கதமிழ்செல்வன் அண்ணன் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 Feb 2019 10:45 PM GMT (Updated: 11 Feb 2019 9:21 PM GMT)

கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதுதொடர்பாக தங்கதமிழ்செல்வன் அண்ணன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

உத்தமபாளையம்,

உத்தமபாளையம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் சின்னச்சாமி. அவருடைய மனைவி செல்வி. இவர், அதே பகுதியை சேர்ந்த தாமரைசெல்வன், கலைநேசன், சந்திரன், ஆண்டவர் ஆகியோரிடம் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இதற்காக மாதந்தோறும் செல்வி, வட்டி கொடுத்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்விக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் வட்டி பணத்தை கொடுக்க முடியவில்லை. இதையடுத்து தாமரைசெல்வன் உள்பட 4 பேரும் சேர்ந்து செல்வியின் வீட்டுக்கு சென்று அவரை மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த செல்வி, விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செல்வியின் மகன் அசோக்குமார் நாராயணத்தேவன்பட்டி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக தாமரைசெல்வன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட தாமரைசெல்வன் என்பவர் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வனின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story