நிவாரணம் வேண்டாம் பட்டாசு ஆலையை திறந்து வேலை கொடுங்கள் பெண்கள் ஆவேசம்


நிவாரணம் வேண்டாம் பட்டாசு ஆலையை திறந்து வேலை கொடுங்கள் பெண்கள் ஆவேசம்
x
தினத்தந்தி 11 Feb 2019 11:30 PM GMT (Updated: 11 Feb 2019 10:58 PM GMT)

அரசு வழங்கும் நிவாரணம் வேண்டாம். பட்டாசு ஆலைகளை திறந்து வேலைகொடுங்கள் என்று தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறினர்.

சிவகாசி,

பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசியில் தொடர் தர்ணா போராட்டம் நேற்று தொடங்கியது

பட்டாசு தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தில் கலந்து கொள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பஸ்சில் வந்தவர்கள் சிவகாசி–விருதுநகர் ரோட்டில் போராட்ட களத்தின் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கி சாரை, சாரையாக போராட்டக்களத்துக்கு வந்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இருப்பிடத்துக்கே தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. இரண்டு தண்ணீர் லாரிகள் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மதியம் 12 மணிக்கு பிஸ்கெட் பாக்கெட் வழங்கப்பட்டது. மதியம் சாப்பாடு பொட்டலம் விநியோகம் செய்யப்பட்டது.

பஸ்வசதி இல்லாத பகுதியில் இருந்து இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த தனியாக இடம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பகுதியில் மட்டும் 300–க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். சிலர் ஆவேசமாகவும் பேசினர்.

10–ம் வகுப்பு வரை படித்த எனக்கு மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததால் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு வந்துவிட்டேன். இங்கு கிடைத்த வருமானத்தை வைத்து தான் எனக்கு திருமணம் நடந்தது. தற்போது எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் தனியார் பள்ளியில் படிக்கிறார்கள். மாற்று வேலை தெரியாத எனக்கு குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் போராட்ட வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். எனது கணவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த மாவட்டத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக சிதைந்துவிட்ட நிலையில் கட்டிட தொழிலும் தற்போது இல்லை.

பள்ளபட்டியை சேர்ந்த மூதாட்டி சங்கரம்மா:–

கணவனால் கைவிடப்பட்ட நான் கடந்த 40 வருடங்களாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு 2 பெண் குழந்தைகள் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தேன். அதற்கான பணம் இந்த வேலையில் தான் கிடைத்தது. இந்த 40 ஆண்டுகளில் அவ்வப்போது பட்டாசு தொழிலுக்கு சிறு, சிறு பிரச்சினைகள் வந்தது உண்டு. ஆனால் அந்த பிரச்சினைகள் எங்களை பாதித்தது கிடை யாது. ஆனால் தற்போது 3 மாதமாக ஆலைகள் திறக்கப்படாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம். ரேசன் அரிசி கூட சரியாக கிடைக்க வில்லை. தனியாக வசித்து வரும் எனக்கு முதியோர் உதவித்தொகை கிடைத்தால் கூட மீதம் இருக்கும் கொஞ்சம் காலத்தை ஓட்டிவிடு வேன். ஆனால் வேலையும் இல்லை. ஓய்வூதியமும் இல்லை என்றால் என்னை போன்றவர்கள் என்ன செய்வது.

விருதுநகரை சேர்ந்த ராஜேஸ்வரி:–

கடந்த 7 வருடாக பட்டாசு ஆலையில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறேன். எனக்கு தினமும் ரூ.200 சம்பளம் கிடைக்கும். என் கண்காணிப்பில் 40 பெண்கள் வேலை செய்து வந்தனர். ஏற்கனவே விலைவாசி அதிகம் என்பதால் குடும்பத்தின் இருவரும் கண்டிப்பான முறையில் வேலை செய்ய வேண்டும் என்ற நிலை இருப்பதால் படித்த வேலைக்கு தகுதியான வேலை கிடைக்காததால் பட்டாசு ஆலையில் வேலைக்கு சேர்ந்து கிடைத்த வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வருகிறோம்.

எனது கணவர் டிரைவர் வேலை செய்து வருகிறார். அவருக்கு கிடைக்கும் வருமானத்தை கொண்டு தற்போது உள்ள சூழ்நிலையில் குடும்பம் நடத்துவது சிரமம். எங்களுக்கு கிடைத்து வந்த குறைந்தபட்ச வருமானத்தை கூட சில காரணங்களை காட்டி தற்போது இல்லாமல் செய்து விட்டார்கள். பட்டாசு ஆலை திறந்தால் தான் விருதுநகர் மாவட்ட பொருளாதாரம் உயரும். இல்லை என்றால் இந்த மாவட்டம் ஏற்கனவே பின்தங்கிய மாவட்டமாக உள்ளநிலையில் மேலும் நிலைமை மோசமாகிவிடும்.

ஏ.லட்சுமியாபுரம் ராஜலட்சுமி வரதராஜன்:–

வீட்டில் இருந்த நகைகள் எல்லாம் அடகு கடைக்கு சென்று விட்டது. பட்டாசு ஆலை திறந்து விடும், வேலை கிடைத்துவிடும், பொருட்களை மீட்டு கொள்ளலாம் என்று இருந்தேன். ஆனால் தற்போதைய சூழ்நிலை பொருட்களை கிடைக்கவிடாமல் செய்துவிடும் போல தெரிகிறது. ஏழை தொழிலாளர்களை காப்பற்ற வேண்டிய அரசியல்வாதிகள் என்ன என்று கேட்கவில்லை. நம்மை வழிநடத்த சரியான தலைவர்கள் இல்லை. இருந்த தலைவர்கள் மறைந்த பின்னர் அதற்கு பின்னர் வந்தவர்கள் தங்களது குடும்பங்களை மட்டும் பார்க்கிறார்கள். எங்களையும் பார்த்தால் எங்களுக்கு இந்த பிரச்சினை வர வாய்ப்பு இல்லை. எங்கள் கோரிக்கைகளை ஏற்று தற்போது உள்ள தடைகளை நீக்க வேண்டும். எங்களுக்கு நிவாரணத்தை விட வேலை முக்கியம். நாங்கள் வேலை செய்து சம்பாதித்து கொள்வோம். அதற்கான வாய்ப்புகளை மட்டும் நீங்கள் கொடுங்கள்.

பட்டாசு தொழில் இல்லாமல் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு தமிழகஅரசு சார்பில் ரூ.2000 சிறப்பு உதவியாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தற்போது அறிவித்ததாக ஒருவர் பேசினார். எங்களுக்கு ரூ.2000 நிவாரணம் வேண்டாம். ஆலைகளை திறந்து வேலை கொடுங்கள். நாங்கள் எங்களை பார்த்து கொள்கிறோம்.


Next Story