மூளைச்சாவு அடைந்த 2 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் 4 குழந்தைகளுக்கு மறுவாழ்வு


மூளைச்சாவு அடைந்த 2 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் 4 குழந்தைகளுக்கு மறுவாழ்வு
x
தினத்தந்தி 11 Feb 2019 10:15 PM GMT (Updated: 11 Feb 2019 11:05 PM GMT)

மூளைச்சாவு அடைந்த 2 வயது சிறுவனின் உடல் உறுப்புகள்தானத்தின் மூலம் 4 குழந்தைகள் மறுவாழ்வு பெற்றனர்.

மும்பை,

புனேயை சேர்ந்த யுவான் பிரபு என்ற 2 வயது சிறுவன் மூளையில் ஏற்பட்ட கட்டியால் பாதிக்கப்பட்டு இருந்தான். பெற்றோர் அவனை சிகிச்சைக்காக மும்பை மெரின்லைனில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

டாக்டர்கள் அவனுக்கு அண்மையில் அறுவை சிகிச்சை செய்தனர். இருப்பினும் சிறுவனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும்ஏற்படவில்லை.

இந்த நிலையில் சிறுவன் யுவான் பிரபுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதை கேட்டு அவனது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் மகனின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன் வந்தனர். இதையடுத்து, அவனது இதயம், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. இதில் இதயம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. கல்லீரல் தானேயில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கும், சிறுநீரகங்கள் மும்பையில் உள்ள இருவேறு ஆஸ்பத்திரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. சிறுவனின் கண்கள் பரேலில் உள்ள கண் வங்கிக்கு அனுப்பப்பட்டது.

இதில் சிறுவனின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவை குழந்தைகளுக்கே பொருத்தப்பட்டன. இதன் மூலம் 4 குழந்தைகள் மறுவாழ்வு பெற்றனர். 2 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது இதுவே முதல் முறை என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story