சத்தி அருகே மூளைக்காய்ச்சலுக்கு மாணவர் சாவு: தாய்– தந்தை, தம்பியை இழந்து தனிமரமாக நிற்கும் இளம்பெண் அரசு வேலை வழங்க மலைவாழ் மக்கள் கோரிக்கை


சத்தி அருகே மூளைக்காய்ச்சலுக்கு மாணவர் சாவு: தாய்– தந்தை, தம்பியை இழந்து தனிமரமாக நிற்கும் இளம்பெண் அரசு வேலை வழங்க மலைவாழ் மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Feb 2019 11:15 PM GMT (Updated: 12 Feb 2019 7:16 PM GMT)

சத்தியமங்கலம் அருகே மூளைக்காய்ச்சலுக்கு மாணவர் பரிதாபமாக இறந்தார். தாய்–தந்தை மற்றும் தம்பியை இழந்து தனிமரமாக நிற்கும் இளம்பெண்ணுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காளிதிம்பம் மலைக்கிராமம் உள்ளது. இந்த மலைக்கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மாரம்மாள் (30). இவர்களுக்கு சிவரஞ்சினி (18) என்ற மகளும், ஹரிபிரசாத் (14) என்ற மகனும் உள்ளனர். சிவரஞ்சினி சத்தியமங்கலம் அரசு பள்ளியில் பிளஸ்–2 முடித்துவிட்டு, ஆடிட்டராக வேண்டும் என்ற கனவோடு கோவை அரசு கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார்.

ஹரிபிரசாத் தலமலையில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளிக்கூடத்தில் 9–ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் சிவரஞ்சினியின் தாய் மாரம்மாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மேலும், தந்தை சாமிநாதனுக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சிவரஞ்சினி தனது கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு சொந்த ஊரான காளிதிம்பத்துக்கு வந்து விட்டார்.

பின்னர் அவர் தந்தை சாமிநாதனை கவனித்து வந்ததோடு, 100 நாள் வேலைதிட்டத்தில் சேர்ந்து வேலை செய்து வந்தார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை கவனித்து வந்தார். மேலும் தனது தம்பியான ஹரிபிரசாத்தையும் படிக்க வைத்தார். வறுமையான சூழ்நிலையில் குடும்பம் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அவருடைய தந்தை சாமிநாதனும் கடந்த ஆண்டு இறந்தார்.

தாயும், தந்தையும் இறந்துவிட்டதால் சிவரஞ்சினியும், ஹரிபிரசாத்தும் மனமுடைந்து காணப்பட்டனர். மேலும் இவர்கள் 2 பேருக்கும் உதவ வேண்டும் என்று மலைவாழ் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இது பற்றிய செய்தி ஊடகங்களில் வெளியாகியது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு, சிவரஞ்சினிக்கும், ஹரிபிரசாத்துக்கும் உதவி செய்ய முன்வந்தது. அதன்படி மாவட்ட கலெக்டர் கதிரவன் மற்றும் அதிகாரிகள் சிவரஞ்சினியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தனர்.

இந்தநிலையில் ஹரிபிரசாத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது ஹரிபிரசாத்துக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஹரிபிரசாத் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி ஹரிபிரசாத்தும் இறந்துவிட்டார். அப்போது அவரின் உடலை பார்த்து அக்காள் சிவரஞ்சினி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. ஹரிபிரசாத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காளி திம்பம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

தாய்– தந்தையை இழந்து தம்பி மட்டுமே தனக்கான ஒரே ஆதரவு என்று வாழ்ந்து வந்த சிவரஞ்சினியின் வாழ்க்கையில் பேரிடியாக அவருடைய தம்பியும் இறந்தது அப்பகுதி மக்களை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறுகையில், ‘குடும்பத்தினர் அனைவரையும் இழந்து தனிமரமாக நிற்கும் சிவரஞ்சினிக்கு அரசு வேலை வழங்கி அவரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Related Tags :
Next Story