தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள்


தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள்
x
தினத்தந்தி 12 Feb 2019 10:45 PM GMT (Updated: 12 Feb 2019 7:19 PM GMT)

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதால் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தை திறக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து தான் சென்னை, கும்பகோணம், மதுரை, திருச்சி போன்ற ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனால் போக்குவரத்து நெருக்கடி அடிக்கடி ஏற்பட்டது. பெருகி வரும் மக்கள் தொகை, வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது.

புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, கும்பகோணம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, கோவை, பழனி, திருநெல்வேலி, நாகர்கோவில், புதுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரத்திலும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

தஞ்சையில் இருந்து வெளியூருக்கு செல்பவர்களில் பெரும்பாலானோர் தங்களது வீடுகளில் இருந்து மோட்டார் சைக்கிள், மொபட்டில் தான் புதிய பஸ் நிலையத்திற்கு வருகின்றனர். பின்னர் அங்குள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் மோட்டார் சைக்கிள், மொபட்டை நிறுத்திவிட்டு, பஸ்சில் புறப்பட்டு வெளியூருக்கு செல்கின்றனர். இப்படி நிறுத்தப்படும் வாகனங்கள் எல்லாம் திறந்துவெளியில் நிறுத்தப்பட்டுள்ளன.

இவைகள் மழையிலும், வெயிலிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்க்கவும், வெளியூர் செல்லும் பயணிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து புதிய பஸ் நிலையத்தில் நிறுத்துவதற்கு வசதியாகவும் ரூ.1½ கோடி மதிப்பில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கட்ட முடிக்கப்பட்டுள்ளது. இந்த பணி முடிவடைந்த 1 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

புதிய பஸ் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் டவுன் பஸ்கள் செல்லும் வழி அடைக்கப்பட்டு, அதிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. திறந்தவெளியில் நிறுத்தப்படுவதால் வெயில், மழையில் வாகனங்கள் பாதிக்கப்படும் என்பதால் பெரும்பாலானோர் வாகன நிறுத்துமிடத்தை புறக்கணிக்க தொடங்கியுள்ளனர்.

கும்பகோணம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் பயணிகள் அமருவதற்காக இரும்பினால் ஆன நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பயணிகள் அந்த நாற்காலிக்கு செல்ல முடியாத அளவுக்கு மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் பஸ்கள் நிற்கக்கூடிய இடத்திலும் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதால் பஸ்கள் நிறுத்துவதற்கு இடையூறு ஏற்படுகிறது.

இங்கே யாரும் வாகனங்களை நிறுத்தக்கூடாது என போலீசார் அறிவுறுத்தினாலும் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தை திறக்க சொல்லுங்கள். அங்கே நாங்கள் நிறுத்திவிட்டு செல்கிறோம் என பதில் அளிக்கின்றனர்.

பயணிகளுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் புதிய பஸ் நிலையத்தின் முன்பகுதி வலப்புறத்தில் 25 கடைகளும், இடதுபுறத்தில் 25 கடைகளும் என மொத்தம் 50 கடைகள் கொண்ட வணிக வளாகம் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகத்தில் உள்ள கடைகள் அனைத்திற்கும் கதவுகள் இருந்தாலும் வணிக வளாகத்திற்குள் நுழையக்கூடிய 3 வாயில்களிலும் கதவுகள் எதுவும் இல்லாமல் திறந்தவெளியில் தான் உள்ளது.

இந்த வணிக வளாகத்திற்கு அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் இரவு நேரத்தில் மட்டுமின்றி பகலிலும் வணிக வளாகம் மதுபான கூடமாக வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தையும் திறக்க வேண்டும் என அனைத்து தரப்பினர் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, மக்கள் வரிப்பணத்தில் கட்டி முடிக்கப்பட்ட வணிக வளாகம், அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கடந்த 1 ஆண்டுக்கு மேல் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் கட்டிடங்கள் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் தேவையில்லாத சம்பவங்கள் எல்லாம் நடைபெற்று வருகிறது. திறந்தவெளியில் வாகனங்களை நிறுத்தாமல் பயணிகள் அமரக்கூடிய இடத்தில் வாகனங்கள் நிறுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. இவற்றை தவிர்க்க அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தையும், வணிக வளாகத்தையும் உடனே திறக்க வேண்டும் என்றனர்.

Next Story