தென்காசி நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு


தென்காசி நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 12 Feb 2019 9:45 PM GMT (Updated: 12 Feb 2019 7:45 PM GMT)

குற்றாலம் கல்லூரியில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார்.

நெல்லை, 

குற்றாலம் கல்லூரியில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

நெல்லை மாவட்டம் தென்காசி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணும் மையமான, குற்றாலம் பராசக்தி மகளிர் கலைக்கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-

தென்காசி நாடாளுமன்ற தொகுதியானது தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுதூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. நாடாளுமன்ற தேர்தல் நாள் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு, குற்றாலம் பராசக்தி மகளிர் கலைக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

வாக்குகள் எண்ணுவதற்கு மற்றும் தகவல் தெரிவிப்பதற்கு வசதியாக தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதி

வாக்கு எண்ணும் பணிகளை கண்காணிக்கும் வகையில் மாவட்ட தேர்தல் பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோருக்கு ஒதுக்கப்படும் அறைகள் ஆய்வு செய்யப்பட்டது. காவல் துறையினரின் பாதுகாப்பு வசதி, மின்வசதி, இணையதள வசதி போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது தென்காசி உதவி கலெக்டர் சவுந்தரராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சாந்தி, தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கராஜ், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story