போளூரில், ரெயில்வே கேட் அருகே மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும்


போளூரில், ரெயில்வே கேட் அருகே மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும்
x
தினத்தந்தி 12 Feb 2019 10:30 PM GMT (Updated: 12 Feb 2019 8:18 PM GMT)

போளூரில் ரெயில்வே கேட் அருகே மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போளூர்,

போளூர் ரெயில்வே பாதையின் குறுக்கே ரூ.17 கோடியே 37 லட்சம் மதிப்பில் மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டுவிழா கடந்த 2-ந் தேதி நடந்தது. இதையொட்டி ரெயில்வே கேட் மூடப்பட்டது. பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பைபாஸ் சாலை வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி போளூர் நகருக்கு வர வேண்டி உள்ளது.

மாற்றுப்பாதையை டோபிகானா அருகில் வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்தனர். அதில் இருசக்கர வாகனம், ஆட்டோ மட்டுமே செல்ல ஏதுவாக இருந்தது. நேற்று முன்தினம் யாரோ மாற்று பாதையில் நீர்பாய்ச்சி உழுதுவிட்டனர்.

நிலத்தின் வரப்பு மீது இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் சேற்றில் விழுந்தனர். சிலர் மறுபக்கத்தில் உள்ள பள்ளங்களில் விழுந்து காயம் அடைந்தனர். ரெயில்வே கேட் மூடப்பட்டு இருசக்கர வாகனங்கள் நுழையாத வகையில் மண்கொட்டி மேடாக்கி இருந்தனர். இருப்பினும் இருசக்கர வாகன ஓட்டிகள் மண்மேட்டில் ஏறி செல்கின்றனர். சவ ஊர்வலத்தை எடுத்து சென்றவர்கள் மூடப்பட்ட ரெயில்வே கேட்டை கடக்க ஒருவரை மாற்றி ஒருவர் மிகவும் சிரமத்துடன் எடுத்து சென்றனர்.

எனவே, சரியான மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போளூர் பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் பைபாஸ் சாலை வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டியுள்ளதால் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பஸ் கட்டணத்தை திடீரென உயர்த்தி விட்டனர். இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Next Story