வெவ்வேறு விபத்துகளில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 12 Feb 2019 10:45 PM GMT (Updated: 12 Feb 2019 8:22 PM GMT)

தர்மபுரி பகுதியில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

தர்மபுரி,

தர்மபுரி அருகே உள்ள ஏ.பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 26). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். சேட்டு நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் பச்சனம்பட்டி கூட்டுரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சேட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தர்மபுரி வட்டார வளர்ச்சி காலனியை சேர்ந்தவர் சிவகாமி (63). ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியரான இவர் நேற்று காலை அந்த பகுதியில் பால் வாங்குவதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சுப்பிரமணி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிவகாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிவகாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த சுப்பிரமணியை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தர்மபுரியை அடுத்த நாயக்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் (55). இவர் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தர்மபுரி பகுதியில் வெவ்வேறு விபத்துகளில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story